இலங்கை மீனவர்கள் 7 பேரை ஜூன் 3 வரை சிறையில் அடைக்க ராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவு

By கி.தனபாலன்


ராமநாதபுரம்: எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்களை 7 பேரை ஜூன் 3 வரை சென்னை புழல் சிறையில் அடைக்க ராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தூத்துக்குடியில் உள்ள இந்திய கடலோர காவல்படையினர் கடந்த சனிக்கிழமையன்று ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கன்னியாகுமரிக்கு தென்கிழக்கே இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை படகு ஒன்றை சிறைபிடித்தனர். அதிலிருந்த இலங்கை மீனவர்கள் சுசந்தா, சில்வா உள்ளிட்ட 7 பேரையும், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்து, படகையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை ஞாயிறன்று தூத்துக்குடி அழைத்து வந்து தருவைகுளம் மெரைன் போலீஸில் ஒப்படைத்தனர்.

அவர்கள் மீது போலீஸார் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். அங்கு மத்திய, மாநில உளவுத்துறையினர் விசாரணைக்குப் பின் அவர்கள் இன்று (மே 20) ராமநாதபுரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

விசாரணைக்கு பின்னர் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் (பொறுப்பு) ராஜா குமார், இலங்கை மீனவர்கள் 7 பேரையும் வரும் ஜூன் 3-ம் தேதி வரை சென்னை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து போலீஸார் இலங்கை மீனவர்களை புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE