இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த படகு: 7 இலங்கை மீனவர்கள் கைது

By எஸ்.கோமதி விநாயகம்

தூத்துக்குடி: இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 7 இலங்கை மீனவர்களை கடலோரக் காவல் படையினர் படகுடன் கைது செய்தனர்.

தூத்துக்குடி கடலோர காவல் படையினர் வைபவ் ரோந்து கப்பலில் இன்று (சனிக்கிழமை) காலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கன்னியாகுமரிக்கு தென் கிழக்கே 74.8 கடல் மைல் தொலைவில், இந்திய கடல் எல்லையில் வேறு நாட்டைச் சேர்ந்த படகு ஒன்று நிற்பதை கண்டனர். உடனடியாக விரைந்து சென்று, அந்தப் படகை சுற்றி வளைத்தனர். அப்போது அது இலங்கையைச் சேர்ந்து மீன்பிடி படகு என்பது தெரியவந்தது.

திர்ட்டி மகா - 6 என்ற அந்த மீன்பிடி படகில் இலங்கை மீனவர்கள் 7 பேர் இருந்தனர். அவர்களை கைது செய்த கடலோர காவல் படையினர், அந்தப் படகையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் நாளை கடல் வழியாக தூத்துக்குடிக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

பின்னர் அவர்களையும், அவர்களது படகையும் தருவைகுளம் மரைன் போலீஸில் ஒப்படைக்க உள்ளனர். மத்திய, மாநில உளவுத்துறை விசாரணைக்கு பின்னர் இலங்கை மீனவர்களை மரைன் போலீஸார் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE