சென்னை: இந்த ஆண்டு கோடையில் கடும் வெயில் வாட்டி வந்த நிலையிலும், தற்போது கனமழை பெய்து வரும் வேளையிலும் கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை உயரவில்லை.
வழக்கமாக கோடை காலம் தொடங்கியதும், நீர் பற்றாக்குறை, கடும் வெப்பத்தால் பூக்கள் உதிர்வது போன்ற காரணங்களால் காய்கறி உற்பத்தி பாதிக்கப்படும். அதன் விளைவாக கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்து, அவற்றின் விலை கடுமையாக உயர்வது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு, வரலாறு காணாத வெயில் அடித்த நிலையிலும் அதைத் தொடர்ந்து தற்போது கனமழை பெய்து வரும் நிலையிலும் கோயம்பேடு சந்தையில் குறிப்பிடும்படியாக காய்கறி விலை உயர்வு ஏற்படவில்லை.
» பில்லூர் அணை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை: கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கு சிக்கல் தீர்ந்தது
» சென்னையில் இருந்து தாய்லாந்து, சவுதி அரேபியாவுக்கு கூடுதல் விமான சேவை தொடக்கம்
கடந்த வாரம் கிலோ ரூ.21-க்கு விற்கப்பட்டு வந்த தக்காளி நேற்று கிலோ ரூ.25 ஆக சற்று விலை உயர்ந்துள்ளது. ரூ.120-க்கு விற்கப்பட்ட பீன்ஸ் ரூ.110 ஆக குறைந்துள்ளது. வழக்கமாக முட்டைக்கோஸ், முள்ளங்கி, நூக்கல் போன்ற காய்கறிகள் கிலோ ரூ.10-க்குள் விற்கப்படும். இந்த கோடையில் அவற்றின் விலை சற்று உயர்ந்துள்ளன.
இது தொடர்பாக கோயம்பேடு சந்தை வியாபாரிகள் கூறும்போது, “கடும் வெயில், மழையால் காய்கறிகள் வரத்தில் பாதிப்பு ஏதும் இல்லை. அதனால் குறிப்பிடும்படியாக காய்களின் விலை உயரவில்லை. வரும் நாட்களில் மழை வாய்ப்பு அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன் தாக்கத்தால் காய்கறிகளின் விலை உயரக்கூடும்” என்றனர்.