குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி தொழில் பூங்கா: இஸ்ரோவுடன் தமிழக அரசின் ‘டிட்கோ’ ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

சென்னை: இஸ்ரோவின் ‘இன்ஸ்பேஸ்’ நிறுவனத்துடன் இணைந்து குலசேகரன்பட்டினத்தில் 1,500 ஏக்கரில் விண்வெளி தொழில் பூங்கா அமைப்பதற்கான நில எடுப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) தெரிவித்துள்ளது.

இந்தியாவின் விண்வெளி தொழில் துறையில் அரசு நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் மூலம் இத்துறை படிப்படியாக உலக நாடுகள் திரும்பி பார்க்கும்வகையில் வளர்ந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் பாதுகாப்பு தொழில் வழித்தடம் அறிவிக்கப்பட்டு விமான போக்குவரத்து, விண்வெளி மற்றும் ராணுவம் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

திறன் வாய்ந்த மனித வளம், முதலீட்டுக்கு உகந்த தொழில் சூழல் ஆகியவற்றுடன், நாட்டின்தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ளதால் தமிழகம் விண்வெளி தொழில் துறையினருக்கு உகந்த பகுதியாக மாறியுள்ளது. மேலும், தமிழகத்தில் தற்போதுள்ள தொழில் கட்டமைப்பு மற்றும் அரசால் உருவாக்கப்பட்ட சூழல்,புத்தாக்க தொழிலுக்கும், முதலீட்டுக்கும் வழிவகுத்துள்ளது.

இந்த சூழலில்தான், தனது2-வது ஏவுதளத்தை தமிழகத்தின் குலசேகரன்பட்டினத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கி வருகிறது. குறிப்பாக, படுக்கப்பத்து, பள்ளக்குறிச்சி, மாதவன்குறிச்சி ஆகியகிராமங்களில், 2,233 ஏக்கர் பரப்பில், ரூ.950 கோடி செலவில் இந்தஏவுதளம் பிரம்மாண்டமாக அமைகிறது. இந்த ஏவுதளத்துக்கு பிரதமர்மோடி கடந்த பிப்.28-ம் தேதி அடிக்கல் நாட்டினார். இந்த ஏவுதளம் அமைக்கப்படுவதன் மூலம்,ராக்கெட் ஏவுவதற்கான எரிபொருள்சேமிக்கப்படுவதுடன், செயற்கைக் கோள் ஏவுதிறனும் மேம்படும். இதன் மூலம், நாட்டின் விண்வெளி ஆற்றல் மேம்படுவதுடன், அதிகஎண்ணிக்கையிலான செயற்கைக் கோள்களை ஏவவும் முடியும். இந்த பணிகளை அடுத்த 2 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் விண்வெளி துறையில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில்தான், குலசேகரன்பட்டினத்தில், தமிழகத்தில் விண்வெளி தொழில் திட்டங்களை பலப்படுத்தும் வகையில், விண்வெளி தொழில் மற்றும்உந்து சக்தி பூங்காவை அமைக்க இஸ்ரோவின் துணை நிறுவனமான இன்ஸ்பேஸ் உடன் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் (டிட்கோ) புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. முன்னதாக இதற்கான அறிவிப்பு, கடந்த பிப்ரவரி மாதம் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பூங்கா அமைப்பதற்கான பணிகளை டிட்கோ தொடங்கியுள்ளது.

செயற்கைக் கோள் ஏவுதளம் அருகில் 1,500 ஏக்கரில் இந்த பூங்காஅமைகிறது. தற்போது, குலசேகரன்பட்டினம் விண்வெளி பூங்கா திட்டத்துக்கு நில எடுப்பு பணி முழு வீச்சில் நடந்து வருகின்றன.

இந்த பூங்கா, விண்வெளி தொடர்பான தொழில் நிறுவனங்கள் செயற்கைக் கோள் ஏவுதளத்துக்கு அருகில் அமைவதற்கு வழிவகை செய்கிறது. தொழில் துறையில் பின்தங்கியுள்ள இப்பகுதியில், தொழில் வளர்ச்சி ஏற்படவும், புதியதொழில் வாய்ப்புகள் உருவாகவும் வகை செய்கிறது. விண்வெளி திட்ட முயற்சிகளில் உலக முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்கேற்கவும் வாய்ப்பு அளிக்கும்.

தமிழகத்தில் தற்போது 59 பல்கலைக்கழகங்கள், 552 பொறியியல் கல்லூரிகள், 494 பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. இவற்றின் மூலம் ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான திறன்பெற்ற மனிதவளம் உருவாக்கப்படுகிறது. தமிழகம் தொழில்நுட்ப கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் நிலையில், விண்வெளி துறைக்கு தேவையான திறன் மிக்க மனிதவளம் கிடைக்கும். இதன்மூலம்,உலகளாவிய விண்வெளி அரங்கில்தமிழகம் சிறப்பிடம் பெறும் எனடிட்கோ தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE