“ஆட்சி அமைப்போம் என காங்கிரஸ் கூறுவதில் தவறு இல்லை!” - செல்வப்பெருந்தகை

By டி.ஜி.ரகுபதி 


கோவை: ”காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்போம் எனக் கூறுவதில் தவறு இல்லை” என கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

கோவை சிந்தாமணிபுதூரில் கோவை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டமும், கணபதியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டமும் இன்று (மே 17) மாலை அடுத்தடுத்து நடந்தது. இதில், கட்சியின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு பேசினார். இக்கூட்டங்களில் கட்சியின் தேசிய செயலாளர் மயூரா எஸ்.ஜெயக்குமார், மாவட்ட தலைவர்கள் கருப்புசாமி, வி.எம்.சி மனோகரன், என்.கே.பகவதி மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து மாநில தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழகத்தில் சிறிய கட்சிகள் கூட நாங்கள் ஆட்சி அமைப்போம் என்கின்றனர். அதனால், காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்போம் என்று கூறுவதில் எவ்வித தவறும் இல்லை. இது கூட்டணியை எந்த விதத்திலும் பாதிக்காது. 57 ஆண்டாக ஆட்சி அமைக்க முடியாமல் இருக்கிறோம். தற்போது மீண்டும் அந்த முயற்சியை எடுப்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லை.

எங்கள் கட்சியை நாங்கள் வலிமைப்படுத்தினால் தோழமை கட்சிகள்தான் வலிமை பெறும். எங்கள் கட்சியின் கட்டமைப்பை வலிமைப்படுத்துவது எங்களின் ஜீவாதார உரிமை. நாங்கள் திமுகவுடன் உண்மையான தோழமையோடு இருக்கிறோம். கட்சியை வலிமைப்படுத்துவது வேறு, தோழமை என்பது வேறு. இந்த இரண்டையும் நீங்கள் ஒன்றாக பார்க்கக்கூடாது. நாங்கள் திமுகவோடு இணக்கமாக இருக்கிறோம்.

எனவே கூட்டணியை விட்டு வெளியே செல்ல வாய்ப்பு இல்லை. கூட்டணி கட்சிகளால் நிர்வாகிகளுக்கு சில சங்கடங்கள் இருக்கிறது. நிர்வாகிகளுக்கு தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதை நாங்கள் முன்னெடுப்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. கட்சியின் கட்டமைப்பை சரிசெய்ய எங்களுக்கு உரிமை இருக்கிறது. அதை நாங்கள் செய்கிறோம்” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE