தமிழகத்தில் 5 நாட்களுக்கு இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அம்மையத்தின் இயக்குநர் பா.செந் தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் வரும் 19-ம் தேதி வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும்.

இதன் பகுதியாக தமிழகத்தில் இன்று (மே 15) ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிமீ வரை) லேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும்.

திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், 18-ம் தேதி வரை தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 35.6 - 37.4 டிகிரி பாரன்ஹீட் வரை படிப்படியாக குறையக்கூடும்.

சென்னையில்.. சென்னை மற்றும் புறநகரை பொருத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைபெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 96.8 முதல் 98.6 டிகிரியை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 82.4 முதல் 84.2 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தென்தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்தது. புதுச்சேரியில் லேசான மழை பதிவானது. காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. அதிகபட்சமாக கோவை மாவட்டம் பொதுப்பணித்துறை மக்கினம்பட்டியில் 8 செமீ மழை பதிவானது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE