2 லட்சம் தாய்மார்களுக்கு மகப்பேறு நிதியுதவி வழங்க வேண்டும்: ராமதாஸ், அண்ணாமலை வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் 2 லட்சம் தாய்மார்களுக்கு மகப்பேறு நிதியுதவியை உடனடியாக வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

ராமதாஸ்: தமிழகத்தில் கடந்தமூன்றாண்டுகளுக்கும் மேலாகவே மகப்பேறு நிதியுதவி முறையாக வழங்கப்படுவதில்லை என்றுகுற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. மத்திய அரசின் நிதியுதவியுடன்தான் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்பதால், கருவுற்ற பெண்களின் விவரம், அவர்களுக்கு செய்யப்படும் மருத்துவ ஆய்வுகள், அவர்களுக்கும், குழந்தைகளுக்கும் போடப்படும் தடுப்பூசிகள் ஆகியவை குறித்த விவரங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாக மத்திய அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.ஆனால், அவ்வாறு பதிவு செய்வதில் நிகழ்ந்த குளறுபடிகளால்தான் மகப்பேறு நிதிகிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. இந்தக் குறை உடனடியாக களையப்பட வேண்டும்.

அரசு நிர்வாகத்தில் நடைபெறும் குளறுபடிகளால் ஏழைப் பெண்களுக்கு கிடைக்கும் உதவிகள் பாதிக்கப்படக்கூடாது. மகப்பேறு நிதியுதவி திட்டத்தைச் செயல்படுத்துவதில் உள்ள குறைகளை களைந்து 2 லட்சம் தாய்மார்களுக்கும் நீண்ட காலமாகவழங்கப்படாமல் உள்ள மகப்பேறு நிதியுதவியை வழங்க வேண்டும்.

அண்ணாமலை: கர்ப்பிணிகள் நலனுக்காக மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வரும் மாத்ரு வந்தனா திட்டம் மற்றும் தமிழகத்தில் 1987-ம்ஆண்டு முதல் செயல்பட்டு வரும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திட்டம் ஆகியவற்றின் மூலம், மத்திய அரசின் நிதியுதவியுடன், தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு 5 தவணைகளாக ரூ.14,000 மற்றும் ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்துபெட்டகம் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது மூன்று ஆண்டுகள் கடந்தும், சுமார் 2 லட்சம் கர்ப்பிணிப் பெண்களுக்கு இன்னும் நிதியுதவி வழங்கப்படவில்லை என்று செய்திகள் வெளிவந்துள்ளன. மாத்ரு வந்தனா திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு வரை மத்திய அரசு,தமிழகத்துக்கு ரூ.257 கோடி நிதிவழங்கியுள்ளது. மகப்பேறு நலனுக்காக வழங்கப்பட்ட நிதியை, மூன்று ஆண்டுகளாக வழங்காமல் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE