தருமபுரம் ஞானபுரீஸ்வரர் கோயிலில் மே 20-ம் தேதி பெருவிழா தொடக்கம்

By செய்திப்பிரிவு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனதிருமடத்தில் உள்ள ஞானபுரீஸ்வரர் கோயில் பெருவிழா வரும் 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 30-ம் தேதி ஆதீனத்தின் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

தருமபுரம் ஆதீன திருமடத்தில் உள்ள ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக தருமபுரம் ஆதீன குருமுதல்வர் குருஞானசம்பந்தர் குருபூஜை விழாவும் கொண்டாடப்படுகிறது.

நடப்பாண்டு ஞானபுரீஸ்வரர் கோயில் பெருவிழா வரும் 20-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளாக வரும் 23-ம் தேதிதிருமுறை திருவிழா, 26-ம் தேதிதிருக்கல்யாணம், திருஞானசம்பந்தர் குருபூஜை, 28-ம் தேதி தேரோட்டம், 29-ம் தேதி காவிரி ஆற்றில்தீர்த்தவாரி ஆகியவை நடைபெறுகின்றன.

வரும் 30-ம் தேதி இரவு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் கயிலை ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சிவிகை பல்லக்கில் பட்டினப் பிரவேசம் மேற்கொண்டு, பக்தர்களுக்கு ஆசி வழங்கும் கொலு காட்சி நடைபெற உள்ளது. விழாவையொட்டி, தினமும் சமயக் கருத்தரங்குகள், பட்டிமன்றம், வழக்காடு மன்றம், சிந்தனை அரங்கம், கவியரங்கம், சொல்லரங்கம், சொற்பொழிவு, சமய பயிற்சி வகுப்புகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE