கரூர்: சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளை வெயிலில் இருந்து பாதுகாக்க மேற்கூரை

By க.ராதாகிருஷ்ணன்

கரூர்: கரூர் மாவட்டம் சுங்கவாயில் போக்குவரத்து சிக்னலில் காத்திருக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகளை வெயில் கடுமையில் இருந்து பாதுகாப்பதற்காக பொதுப்பணித்துறை சார்பில் தகர மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த இரு மாதங்களாக வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் பல்வேறு நகரங்களில் போக்குவரத்து சிக்னல்களில் கடுமையான வெயிலில் காத்திருக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்காக பசுமை கூரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்திலேயே அதிகளவு வெப்பம் பதிவாகும் கரூர் மாவட்டதில் அக்னி நட்சத்திர வெயில் தொடங்கியுள்ள நிலையில் கரூர், திருச்சி நெடுஞ்சாலையில் சுங்கவாயிலில் உள்ள போக்குவரத்து சிக்னலில் கரூர் செல்லும் சாலையில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளுக்காக இன்று ( மே 12ம் தேதி ) பொதுப் பணித்துறை சார்பில் தகரத்திலான மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் கடும் வெயிலில் இச்சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர். ஆட்சியர் மீ.தங்கவேல் அறிவுறுத்தலின் பேரில் இம்மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். மேலும் கரூர் மாநகராட்சி சார்பில் மேலும் சில சிக்னல்களில் வாகன ஓட்டிகளுக்கான மேற்கூரைகள் அமைக்கப்படும் எனவும் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE