ஜெயக்குமார் தனசிங் குடும்பத்தினரிடம் ப.சிதம்பரம் நேரில் ஆறுதல்

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே மர்மமாக உயிரிழந்த கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் தனசிங் (60) வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினரிடம் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ஆறுதல் கூறினார்.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே கரைச்சுத்துபுதூரை சேர்ந்த ஜெயக்குமார் தனசிங், கடந்த 2-ம் தேதி மாயமானார். கடந்த 4-ம் தேதி அவரது தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் அவரது சடலத்தை போலீஸார் மீட்டனர். தொடர்ந்து உவரி போலீஸார் சந்தேக மரணம் என்று வழக்கு பதிந்துள்ளனர்.

இந்த வழக்கை திருநெல்வேலி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் என். சிலம்பரசன் தலைமையிலான 8 தனிப்படை போலீஸார் விசாரித்து வருகிறார்கள். ஜெயக்குமார் தனசிங் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து கடந்த 8 நாட்கள் ஆகியும் துப்பு துலக்கப்படவில்லை.

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கரைசுத்துபுதூரிலுள்ள ஜெயக்குமார் இல்லத்துக்கு சென்று, அவரது சகோதரர்கள் கேபிகே செல்வராஜ், கேபிகே பொன்னையா மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். காங்கிரஸ் நிர்வாகிகள் வானமாமலை, குட்டம் சிவாஜிமுத்துக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE