தொடரும் பட்டாசு ஆலை விபத்துகள்: ஆய்வு செய்ய தொழிலாளர் நல துறை உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: பட்டாசு விபத்துகள் தொடரும் நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள பட்டாசு தொழிற்சாலைகள் உரிமம், தொழிலாளர் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு தொழிலாளர் நலத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் பட்டாசு தொழிற்சாலை அதிகமுள்ள விருதுநகர் மாவட்டம் மற்றும் இதர பகுதிகளில் பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளபகுதிகளில் அடிக்கடி விபத்துகள்நேரிட்டு, உயிர்சேதம் அதிகரிக்கிறது. அண்மையில் விழுப்புரம், தொடர்ந்து தற்போது சிவகாசி என தொடரும் விபத்துகளால், பொதுமக்கள் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள பட்டாசு தொழிற்சாலைகள் உரிய உரிமம் பெற்றுஇயங்குகின்றனவா, தொழிலாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை மாவட்ட நிர்வாகங்கள் ஆய்வுசெய்து, 10 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க தொழிலாளர் நலத் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பட்டாசு தொழிற்சாலைகள் செயல்படும் நிலையில், சில மாதங்கள் முன்னதாகவே ஆய்வுசெய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. அவற்றில் சில மாவட்டங்கள் ஏற்கெனவே அறிக்கையை அளித்துள்ளன. தற்போது விருதுநகர் உள்ளிட்ட பிற மாவட்டங்களும் அறிக்கை அளிக்குமாறு தொழிலாளர் நலத் துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தையும் ஆய்வு செய்து, அறிக்கை அளிக்குமாறு தொழிலாளர் நலத் துறைஅறிவுறுத்தியுள்ளது. தொழிலாளர்பாதுகாப்பு தொடர்பாக விருதுநகரில் உள்ள பெரிய மற்றும் சிறிய பட்டாசுத் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்துமாறு தொழிலாளர் நலத் துறை உத்தரவிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE