சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 10 தொழிலாளர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு

By செய்திப்பிரிவு

சிவகாசி: சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த 10 தொழிலாளர்களின் குடும்பத்துக்கு உரிமையாளர் சார்பில் இழப்பீடாக தலா ரூ.5 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. சிவகாசி அருகே செங்கமலப்பட்டி சுதர்சன் பட்டாசு ஆலையில் நேற்று முன்தினம் நடந்த வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

காயமடைந்த 11 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையிலும், படு காயமடைந்த 3 பேர் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையிலும் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு உரிமையாளர் தரப்பில் தலா ரூ.10 லட்சமும், இறுதிச் சடங்கு செலவுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்க வேண்டும் என பட்டாசு தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் ஆர்டிஓ விஸ்வநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில், பட்டாசு ஆலை உரிமையாளர் தரப்பிலிருந்து உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சத்துக்கான காசோலையும், இறுதிச் சடங்குக்கான செலவுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட்டது.

இதற்கிடையே உயிரிழந்தோரின் உடல்கள் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, குடும்பத்தாரிடம் ஒப்ப டைக்கப்பட்டு இறுதிச் சடங்குகள் நடந்தன.

முன்னதாக நேற்று காலை சிவகாசி அரசு மருத்துவமனை முன் தமிழர் தேசம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அப்போது, பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சமும், காயமடைந்தோரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சமும் தமிழக அரசு சார்பில் நிவாரணமாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE