சிறுமி கடிபட்ட விவகாரம் அடங்குவதற்குள் பரங்கிமலையில் சிறுவனை கடித்து குதறிய நாய்

By செய்திப்பிரிவு

சென்னை: நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, 4-வது லேன் பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை கடந்த 5-ம் தேதிஇரண்டு நாய்கள் கடித்து குதறியதுபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பலத்த காயமடைந்த அச்சிறுமி ஆயிரம் விளக்கில் உள்ள தனியார்மருத்துவமனையில் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், பரங்கிமலை காவலர் குடியிருப்பில் சிறுவன் ஒருவரை நாய் கடித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதன் விவரம் வருமாறு:

பரங்கிமலை காவல் நிலையம் பின்புறம் உள்ள ஆலந்தூர் ராஜாதெருவில் காவலர் குடியிருப்பு உள்ளது. இதில் இ-பிளாக்கில் உள்ள ஒரு வீட்டில் கார்த்திகேயன் என்பவர் குடும்பத்தோடு வசித்துவருகிறார். இவர் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் தனது வீட்டில் வெளிநாட்டு வகை நாயை வளர்த்து வருகிறார். இதே வளாகத்தில் பின்புறம் உள்ளபி-பிளாக்கில் ஒரு வீட்டில் குடியிருப்பவர் காவலர் வினோதா. இவர் அசோக் நகரில் உள்ள பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவில் பணியில் உள்ளார். நேற்று முன்தினம் கார்த்திகேயனின் மகன் தங்களது நாயை பி-பிளாக் அழைத்துச் சென்றுள்ளார்.

அப்பொழுது அங்கே சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த வளர்ப்பு நாய், விளையாடிக் கொண்டிருந்த வினோதாவின் உறவினர் மகன் அஸ்வந்த்தை (11) விரட்டி விரட்டி கடித்தது. அதிர்ச்சி அடைந்த மற்ற சிறுவர்கள் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் திரண்டு நாயை விரட்டி விட்டனர். பின்னர், காயம் அடைந்த சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

சிறுவனை நாய் கடித்த விவகாரம் குறித்து பரங்கிமலை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாய்கடி விவகாரத்தை முற்றிலும் தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE