மீன் தட்டுப்பாடான நேரத்தில் கைகொடுக்கும் நெத்திலி ரகம்!

By செய்திப்பிரிவு

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட கட்டுமர மீனவர்களுக்கு நெத்திலி ரக மீன்கள் அதிகம் கிடைக்கின்றன.

கிழக்கு கடல் பகுதியில் மீன்பிடிதடைக்காலம் அமலில் உள்ளது. இதனால், சின்னமுட்டம் துறைமுக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. கடந்த ஒருமாதத்துக்கு மேல் மீன்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. போதிய அளவில் மீன்கள் கிடைக்காததால் உள்ளூர் தேவைக்கே போதாத நிலை உள்ளது. சமீப காலமாக கட்டுமரங்களில் பிடிபடும் சாளை, நெத்திலி போன்ற ரகங்களும் குறைவாகவே கிடைத்தன. இந்நிலையில், கட்டுமர மீனவர்களுக்கு நெத்திலி மீன்கள் அதிகமாக கிடைக்கிறது.

நேற்று முன்தினம் கடலுக்குச் சென்ற கட்டுமரங்களில் ஏராளமான நெத்திலி மீன்கள் கிடைத்தன. மீனவர்கள் அவைகளை குளச்சல் மீன் ஏலக் கூடத்தில் குவித்து வைத்து விற்பனை செய்தனர். காலையில் ரூ. 1,000 முதல் ரூ. 1,500-க்கு விலைபோன ஒரு குட்டை நெத்திலி மீன்கள், பின்னர் நேரம் செல்லச் செல்ல ரூ. 600 வரை விற்பனை ஆனது. இதைப்போல் குமரி மாவட்டத்தில் பிற பகுதிகளிலும் நெத்திலி மீன்கள் அதிகமாக கிடைத்தன. மீன் தட்டுப்பாடான நேரம் நெத்திலி மீன் பாடு அதிகம் உள்ளதால் ஓரளவு வருவாய் பெற்ற மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE