தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: ஜூன் 7-க்குள் பதில் மனு தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு ஐகோர்ட் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்த தேசிய மனித உரிமை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்த வழக்கில், எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட அதிகாரிகள் ஜூன் 7-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை நடத்தியது. பின்னர் அதன் புலனாய்வு பிரிவு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இதை எதிர்த்து மதுரையை சேர்ந்த வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில் தனது புகாரின் அடிப்படையில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புள்ளது என நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள அதிகாரிகளையும் இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்த்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் நீதிபதி என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஹன்றி திபேன், அதிகாரிகளுக்கு எதிராக மேற்கொண்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கையை தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும், அந்த அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என தெரிவித்தார்.

அப்போது அரசுத் தரப்பில், வழக்கில் எதிர்மனுதார்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும், ஜூன் 7-ம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 18-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE