வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமையும் பகுதியை தொல்லியல் நிபுணர்கள் குழு ஆய்வு செய்ய வேண்டும் - உயர் நீதிமன்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் நிபுணர்கள் குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

வடலூரில் வள்ளலார் கோயில் அமைந்துள்ள சத்தியஞான சபை முன்பாக உள்ள பெருவெளியில் ரூ.99 கோடி செலவில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்ததை எதிர்த்தும், வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தடை கோரியும் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

தொல்லியல் கட்டுமானங்கள்: அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி,வடலூர் சர்வதேச மையத்தில் அமைக்கப்படவுள்ள பக்தர்களுக்கான 16 அடிப்படை வசதிகளை விளக்கி தமிழக அரசு தரப்பில் அறிக்கையை தாக்கல் செய்தார். மேலும், சர்வதேச மையம் அமையஉள்ள பகுதியை தொல்லியல் துறை அதிகாரிகளும் ஆய்வு செய்துஅறிக்கை அளித்துள்ளனர்.

அதில் 17 மற்றும் 18-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவரின் எச்சங்கள் மட்டுமே கண்டறியப்பட் டுள்ளன. அந்தப் பகுதியில் எந்தவொரு கட்டுமானமும் நடைபெறவில்லை. ஒருவேளை ஏதேனும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அல்லது தொல்லியல் துறை முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்கள் கண்டறியப்பட்டால் அவை பாதுகாக்கப்படும் என தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, தொல்லியல் துறை ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வுசெய்தால் மட்டுமே முறையாக இருக்கும் என்றார்.

அதையேற்ற அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், இதுதொடர்பாக 3 பேர் கொண்ட தொல்லியல் நிபுணர்கள் அடங்கிய குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யப்படும், என்றார்.

அதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தொல்லியல் நிபுணர்குழுவி்ன் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தி, இந்த வழக்கை கோயில்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர் வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE