போக்குவரத்துத் துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும்: தமிழ்நாடு அரசு பணியாளர்கள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: போக்குவரத்துத் துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கையை கைவிடவேண்டும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் வலியுறுத்திஉள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடுஅரசுப் பணியாளர் சங்கத்தின்சிறப்புத் தலைவர் கு.பால்பாண்டியன், மாநில தலைவர் ந.வேழவேந்தன், பொதுச் செயலாளர் இரா.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் தலைமைச் செயலாளரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

போக்குவரத்துத் துறையில் ஆய்வுகள் எதுவும் செய்யாமல், பணியாளர்களை நேரில் சந்தித்து கருத்துகளைப் பெறாமல் போக்குவரத்துத் துறையை தொழில்நுட்பதுறையாக்கி, தொழில்நுட்பம் அறியாத அமைச்சுப் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, தொழில்நுட்ப பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது என்பது இயற்கை நீதியின் பார்வையில் நியாயம் இல்லை. ஐஏஎஸ் அலுவலர்களைக் கொண்ட குழு போக்குவரத்துத் துறையை ஆய்வு செய்து இது தொடர்பாக முடிவு செய்ய வேண்டும்.

10 கோரிக்கைகள்: போக்குவரத்துத் துறையில் அலுவலக உதவியாளர், இரவுக்காவலர், ஓட்டுநர், பதிவறை எழுத்தர்,தட்டச்சர் உட்பட அனைத்து நிலை அமைச்சுப் பணியாளர்களின் காலிப் பணியிடங்களை வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமும், பதவி உயர்வு மூலமும், தேர்வாணையக் குழு மூலமும் உடனடியாக நிரப்ப வேண்டும். போக்குவரத்துத் துறை அமைச்சுப் பணியாளர்களுக்கு வாகனங்களை சோதனை செய்யும் பொறுப்பு வழங்க வேண்டும்.

மாநிலம் முழுவதும் உள்ள 14 இணை, துணை போக்குவரத்து ஆணையர் பணியிடங்கள் அவசியமற்றதாகக் கருதி ரத்து செய்ய வேண்டும். முந்தைய ஆட்சிக் காலத்தில் 10 ஆண்டுகளில் போக்குவரத்துத் துறை அமைச்சுப் பணியாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைக் களைந்து, அவர்களின் நலன் பாதுகாக்கப்பட குழு ஒன்றுஅமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட10 கோரிக்கைகள் அடங்கிய மனுவை தலைமைச் செயலாளரிடம் வழங்கினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE