தமிழக மகளிர் காங்கிரஸுக்கு புதிய தலைவர்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவியாக ஹசீனா சையத் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவியாக சுதா ராமகிருஷ்ணன் இருந்தார். அவர் மக்களவை தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவியாக ஹசீனா சையத் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் பிறப்பித்துள்ளார்.

காங்கிரஸ் பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த ஹசீனா சையத்தின் தந்தை சுதந்திர போராட்ட வீரர். ஹசீனா இளம் பருவத்தில் இருந்தே காங்கிரஸில் பயணித்து வருகிறார். மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். அகில இந்திய மகளிர் காங்கிரஸில் கடந்த 12 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். அதில் அகில இந்திய செயலாளராகவும், தமிழக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளராகவும், பல்வேறு மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளராக இருக்கும் அவர், தற்போது மாநில மகளிர் காங்கிரஸ் தலைவியாக நியமிக்கப்பட்டார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, மகளிருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி காங்கிரஸ். நாட்டின் முதல் பெண் பிரதமர், முதல் பெண் குடியரசு தலைவர் காங்கிரஸ் ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டனர். மகளிர் பாதுகாப்புக்கு எப்போதும் காங்கிரஸ் துணை நிற்கும். எனக்கு இப்பதவியை கொடுத்த காங்கிரஸ் தலைமைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிரான முதல் குரலை மகளிர் காங்கிரஸ் கொடுக்கும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE