பூந்தமல்லி - பரந்தூர் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டம்: ஆறு மாதங்களில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க முடிவு

By செய்திப்பிரிவு

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், பூந்தமல்லி – பரந்தூர் வரையிலான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, 5 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. இரண்டு மாதங்களில் தகுதியான ஆலோசனை நிறுவனம் தேர்வு செய்யப்படும். அதன்பிறகு, 6 மாதங்களில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் இரண்டாம் கட்டமெட்ரோ ரயில் திட்டம், 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ., தொலைவுக்கு பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. இப்பணிகள் அனைத்தையும் வரும் 2028-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, புறநகர் பகுதிகளை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பணிகள் நடைபெறும் 3 வழித்தடங்களையும் நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஒன்றான கலங்கரைவிளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தை பரந்தூர் வரை 43 கி.மீ. தொலைவுக்கு நீட்டிக்க திட்டமிடப்பட்டது. இதையடுத்து, சாத்தியக்கூறு அறிக்கை தயாரித்து, தமிழக அரசிடம் கடந்த ஜன. 3-ம் தேதி சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையை ஆய்வு செய்த தமிழக அரசு, பூந்தமல்லி – பரந்துார் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து, அடுத்தகட்டமாக, விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க அனுமதி அளித்தது. இதையடுத்து, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கடந்த பிப்ரவரியில் ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், பூந்தமல்லி - பரந்தூர் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பு தொடர்பாக விரிவான திட்டஅறிக்கை தயாரிக்க 5 ஆலோசனைநிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. இந்த நிறுவனங்களில் தகுதியான நிறுவனத்தை தேர்வு செய்து, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்புதல் வழங்கப்பட உள்ளது.

5 நிறுவனங்கள் விண்ணப்பம்: இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: பூந்தமல்லியில் இருந்துதிருமழிசை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக பரந்தூர் வரைமெட்ரோ ரயில் நீட்டிப்பு தொடர்பாகவிரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. இதற்கான, ஒப்பந்தப் புள்ளியில் ஆர்வி அசோசியேட்ஸ் ஆர்கிடெக்ட்ஸ் இன்ஜினீயர்கள் மற்றும் கன்சல்டன்ட்ஸ் நிறுவனம் உள்பட 5 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. தொழில்நுட்ப மதிப்பீட்டுக்காக ஏலம் அனுப்பப்படும். பின்னர் நிதி ஏலத்தின்போது, குறைந்த ஏலதாரர் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்த செயல்முறை இரண்டு மாதங்கள் ஆகலாம்.

பூந்தமல்லி முதல் பரந்தூர் வரைவழித்தடத்தின் நீளம் 43.63 கி.மீ. ஆகும். பூந்தமல்லி - பரந்தூர்நீட்டிப்பு திட்டத்தில் நசரத்பேட்டை,செம்பரம்பாக்கம், பாப்பான்சத்திரம், இருங்காட்டுக்கோட்டை, பெரும்புதூர் உள்பட 19 மெட்ரோ ரயில் நிலையங்கள் சாத்தியக்கூறு அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. மதிப்பிடப்பட்ட நிறைவு செலவு ரூ.10,712 கோடி.

இத்தடத்தில் பெரும்பாலும் மேம்பால பாதையில் மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்ட அறிக்கை 6 மாதங்களில் தயாரிக்கப்படும். விரிவான திட்ட அறிக்கையில், மேம்பால பாதை, சுரங்கப்பாதை வழித்தடங்கள், ரயில் நிலையங்கள், திட்ட மதிப்பீடு உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE