சொந்த ஊரில் வாக்களிப்பதற்காக சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கம்: சென்னையில் இருந்து 6 லட்சம் பேர் பயணம்

By செய்திப்பிரிவு

சென்னை: மக்களவை தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து பேருந்துகள், ரயில்கள், சொந்த வாகனங்களில் சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இதனால் பேருந்து, ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் மக்களவை பொதுத் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தலும் இன்று நடைபெறுகிறது.

இந்த நிலையில், சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் கல்வி, பணி, தொழில் காரணமாக வசிக்கும் பலருக்கும் தங்களது சொந்த ஊரில் வாக்குரிமை உள்ளது. அவர்கள் சிரமமின்றி வாக்களிக்க வசதியாக, தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் ஏப்ரல் 17, 18-ம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் உட்பட 10,214 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டது.

அதன்படி, சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் நேற்று முன்தினம் முதல் இயங்கத் தொடங்கின. சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகள், 807 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 2,899 பேருந்துகள் இயக்கப்பட்டன. இப்பேருந்துகளில் சுமார் 1.48 லட்சம் பேர் பயணித்தனர். இதேபோல, 2-வது நாளாக நேற்றும் சிறப்பு பேருந்துகள் இயங்கின. அரசு பேருந்துகளில் பயணம் செய்ய தமிழகம் முழுவதும் சுமார் 37 லட்சம் பேர் முன்பதிவு செய்திருந்தனர்.

பயணிகளின் வசதிக்காக நேற்று சென்னையில் இருந்து வழக்கமான 2,092 பேருந்துகளுடன் 1,785 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டிருந்தது. மக்களின் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்பட்டன. இப்பேருந்துகள் மூலம் நேற்று சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

இவ்வாறு கடந்த 2 நாட்களில் 3.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அரசு பேருந்துகள் மூலம் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். சென்னையில் இருந்து ஆம்னி பேருந்துகளில் 1.15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.

தேர்தலுக்காக சென்றவர்கள் மீண்டும் ஊர் திரும்பும் வகையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் ஏப்ரல் 20-ம் தேதி 260 பேருந்துகளும், 21-ம் தேதி 1,565 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. இதேபோல, தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 20-ம் தேதி 400 பேருந்துகளும், 21-ம் தேதி 1,895 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

தேர்தலுக்கு வாக்களிக்கும் வகையில் சொந்த ஊர் செல்வதற்காக சென்னையில் இருந்து வழக்கமாக செல்லும் ரயில்களில் ஏராளமானோர் முன்பதிவு செய்து இருந்தனர். அவர்கள் அனைவரும் ரயில்களில் சொந்த ஊர்களுக்கு நேற்று புறப்பட்டனர். இதன் காரணமாக, சென்னை எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.

சென்னையில் இருந்து கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, பெங்களூரு ஒயிட்ஃபீல்டு ஆகிய நகரங்களுக்கு செல்லும் சிறப்பு ரயில்களிலும் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. ரயில்களில் 2 நாட்களும் சேர்த்து சுமார் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.

இவ்வாறு அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள், ரயில்கள், சொந்த வாகனங்கள் மூலம் சென்னையில் இருந்து மட்டும் சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE