வாழ்க்கைக்கு தேவையான 650க்கும் மேற்பட்ட பொருட்கள் ஒரே இடத்தில் கிடைக்கக் கூடிய வகையில் சென்னையில் அம்மா வாரச்சந்தைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் தொடங்குவார் என்று மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி வியாழக்கிழமை அறிவித்தார்.
சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மன்றக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் அம்மா வாரச்சந்தை குறித்து மேயர் அறிவித்ததாவது:
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் வாய்ப்பி ருக்கும் இடங்களில் சோதனை அடிப்படையில் ஒரு வாரச்சந்தைக்கு 200 கடைகள் வீதம் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இதற்கான பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வாரச்சந்தைக்கு வரும் மக்கள் வாகனங்களை நிறுத்துவ தற்காகவும், 200 கடைகள் நல்ல இடைவெளிவிட்டு அமைக்கவும் குறைந்தபட்சம் ஒரு ஏக்கரிலிருந்து 5 ஏக்கர் வரை பரப்பளவு உள்ள இடங்களில் மட்டுமே இந்த வாரச்சந்தைகள் அமையும். இவை பயன்படுத்தப்படாமல் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள், அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களின் இடங்களில் அமையவுள்ளன.
உற்பத்தியாளர்களிடமிருந்து ஒரு பொருள் நுகர்வோருக்கு வந்து சேருவதற்குள் 6 இடைத்தர கர்களிடம் கைமாறுகிறது. இந்நிலையை மாற்ற அம்மா வாரச்சந்தை உதவும்.
வாரச்சந்தையில் 40-க்கும் மேற்பட்ட அரசு துறைகள் சார்பாக, 155 வகைகளுக்கு மேலான 650-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைக்கும். இவற்றை வெளிச்சந்தையைவிட குறைந்த விலையில் வாங்கவும் வழி செய்யப்படும்.
அம்மா வாரச்சந்தை பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகாதபோது, அது பற்றி எந்த விவரமும் தெரியா மல் பலர் விமர்சிக்கின்றனர், வழக்கு தொடர்கின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் அம்மா வாரச்சந்தை விரைவில் தொடங்கப்படும்.
வாரச்சந்தையில் 650-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைக்கும். இவற்றை வெளிச்சந்தையை விட குறைந்த விலையில் வாங்கவும் வழி செய்யப்படும்.