மீனாட்சியம்மன் கோயில் பட்டாபிஷேக விழாவில் அமைச்சரின் தாயாரிடம் செங்கோல் வழங்க தடை கோரிய மனு தள்ளுபடி

By செய்திப்பிரிவு

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் பட்டாபிஷேகத்தின்போது, அறங்காவலர் குழுத் தலைவரும், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயாருமான ருக்மணியிடம் செங்கோல் வழங்கத் தடை விதிக்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மதுரை கோச்சடையைச் சேர்ந்ததினகரன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்விலும் ஆகமவிதிகள் முறையாகப் பின்பற்றப்படும். விழாவின் 8-ம் நாளில் பட்டாபிஷேகம் நடைபெறும். அன்று அலங்கரிக்கப்பட்ட குடையின் கீழ் செங்கோல் பாதுகாப்பாகக் கொண்டுவரப்பட்டு, மீனாட்சியம்மனின் கைகளில் ஒப்படைக்கப்படும். அந்தச் செங்கோலை உரிய நபர் பெற்றுக் கொள்வார்.

பாதுகாப்பு கருதி கோயில் அறங்காவலர் குழுத் தலைவரே செங்கோலைப் பெற்றுக் கொள்வார். ஆகம விதிப்படி திருமணம் ஆகாதவரோ, கணவன் அல்லது மனைவியை இழந்தவரோ செங்கோலைப் பெற்றுக் கொள்ள முடியாது.

தற்போது மீனாட்சியம்மன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவராக இருப்பவர் ருக்மணி பழனிவேல்ராஜன் (அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாயார்). அவர் கணவரை இழந்தவர். கோயில் செயல் அலுவலரும் திருமணமாகாதவர். இதனால் இவர்களிடம் செங்கோலை வழங்க முடியாது.

எனவே, பட்டாபிஷேகத்தின்போது கோயிலின் மூத்தவரான அனந்த குல சதாசிவ பட்டர் தகுதியான நபராக இருப்பதால், அவரிடம் செங்கோலை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி சரவணன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் இதுபோன்ற கோரிக்கையுடன் தொடரப்பட்ட மனுக்களை ஏற்கெனவே உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, திருமணம் ஆகாதவர்கள், கணவன்அல்லது மனைவியை இழந்தவர்கள் செங்கோலை வாங்கக் கூடாதுஎன ஆகம விதிகளில் எங்கு உள்ளது? என கேள்வி எழுப்பினார். மேலும், கோயிலுக்கு இந்துக்கள் அனைவரும் தானே செல்கிறார்கள்? விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முறையாகச் செய்யப்பட்டுள்ள நிலையில், கடைசி நேரத்தில் இந்த வழக்கை தொடர்ந்திருப்பது ஏன்? இந்தக் காலத்திலும் இதுபோன்ற கருத்துகளை முன்வைப்பது ஏற்கத்தக்கது அல்ல. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE