“ஏம்பா, என்னை இந்த படத்தோடு மீம்ஸ் போட்டு...” - செல்லூர் ராஜூ கலகலப்பு

By செய்திப்பிரிவு

மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து மேலமாசி வீதி பகுதியில் வசிக்கும் வடமாநிலங்களைச் சேர்ந்த மக்களிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வாக்கு சேகரித்தார். அப்போது, அவருக்கு தலைப்பாகை, பாசி மணி மாலையை வடமாநிலத்தவர்கள் அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

அதை ஏற்றுக் கொண்ட செல்லூர் ராஜூ, பாசி மணி மாலையை கழற்ற முயன்றார். அருகில் இருந்த நிர்வாகிகள், அண்ணே, பாசமாக வடமாநிலத்தவர்கள் அணிவித்த பாசி மணி மாலையை கழற்ற வேண்டாம் என்றனர். அதற்கு, ‘ஏம்பா, என்னை இந்த படத்தோடு மீம்ஸ் போட்டு காமெடி பண்ணுவாங்களேப்பா?’ என்று சிரித்தபடி கேட்டார் செல்லூர் ராஜூ.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக அழிந்துபோய்விடும் என்று அண்ணாமலை சொல்கிறார். அவர் என்ன ஜோசியரா? விசுவாமித்திரரா? எத்தனை முறைதான் அவருக்குப் பதிலடி கொடுப்பது. அரசியல் என்றாலே அண்ணாமலைக்கு என்னவென்று தெரியவில்லை.

அரசியல் அரிச்சுவடி தெரியாத அவரை பற்றி பேசுவதால் எந்தப் பலனும் இல்லை. அதிமுக இவரைப்போல் எத்தனையோ பேரை பார்த்துள்ளது. அண்ணாமலை என்று பெயர் வைத்துக் கொண்டால் அவர் என்ன சூப்பர் ஸ்டாரா? அவர் எங்களுக்கு ‘ஜூஜூபி’. இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE