‘உலகமே பாராட்டும் பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி விமர்சிக்கிறார்’ - சரத்குமார் @ கோவை

By இல.ராஜகோபால்

கோவை: கோவை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவு கோரி வடக்கு சட்டப்பேரவை தொகுதியில் பல்வேறு இடங்களில் நடிகர் சரத்குமார், ஞாயிற்றுக்கிழமை பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

“கடந்த 50 ஆண்டுகள் நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சி ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்தவில்லை. பாஜக மீது குறை கூறுவதை மட்டுமே வாடிக்கையாக கொண்டுள்ளது. பெண்களுக்கு உரிமை தொகை, இலவச பேருந்து வசதி வழங்கிவிட்டு அநாகரிகமாக திமுகவினர் பேசி வருகின்றனர். உலகமே பாராட்டும் தலைவராக மோடி திகழ்கிறார். அமைச்சர் உதயநிதி அவரை விமர்சித்து வருகிறார்.

மோடியின் கால் தூசிக்கு கூட உதயநிதி சமம் இல்லை. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது காங்கிரஸ், திமுக கட்சிகள். மத்திய அரசு வழங்கும் பல கோடி ரூபாயை வைத்து ஆக்கப்பூர்வமான எந்த திட்டத்தையும் திமுக அரசு செயல்படுத்தவில்லை.

போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்து விட்டது. மூன்றாவது முறையாக மீண்டும் மோடி பிரதமராக பொறுப்பேற்க கோவை மக்களவை தொகுதியில் அண்ணாமலைக்கு வாக்களிக்க வேண்டும்” என்றார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE