திமுக ஓட்டுக்கு பணம் கொடுத்தால் ‘கஞ்சா விற்ற பணம் வேண்டாம்’ என மக்கள் கூற வேண்டும்: அண்ணாமலை வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

சென்னை: திமுக ஓட்டுக்கு பணம் கொடுத்தால் கஞ்சா விற்ற பணம் வேண்டாம் என மக்கள் கூற வேண்டும் எனபாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:

தமிழகத்தில் வெறும் 21 இடங்களில் போட்டியிடும் திமுக தலைவர் ஸ்டாலின், இந்தியாவைக் காப்பாற்றப் போவதாகக் கூறுகிறார். திமுக - காங்கிரஸ் கூட்டணியிடம் இருந்து, தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பது தான் மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

மக்களவைத் தேர்தல், தமிழகத்தில் 2026-ம் ஆண்டு ஏற்படவிருக்கும் ஆட்சி மாற்றத்துக்கு அடித்தளம் அமைக்கும். வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விளம்பரஅரசியல் நடத்தும் திமுகவை அரசியலை விட்டு அப்புறப்படுத்தவிருக்கும் தேர்தல்.

அனைவருக்குமான நல்லாட்சி: பிரதமர் மோடியின் ஆட்சி விளம்பரம் தேவையில்லாத ஆட்சி. மோடிவீடு, ஒவ்வொரு வீட்டுக்கும் குழாயில் குடிநீர், நூறு நாள் வேலைத்திட்டத்தில் ரூ.174 ஆக இருந்த ஊதியத்தை, ரூ.319 ஆக உயர்த்தியது, மக்களுக்கு ரூ.60,000 கோடி நிதி, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000 என இதுவரை ரூ.30,000,முத்ரா கடனுதவி என அனை வருக்குமான நல்லாட்சியாகும்.

ஆனால், 2004 – 2014 திமுக காங்கிரஸ்10 ஆண்டு ஆட்சியில், தமிழகத்துக்கு துரோகத்தைத் தவிர எதுவும் கிடைக்கவில்லை. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தின் உயரத்தைக் குறைத்த துரோகம், கேரளாவில் இன்னொரு அணையைக் கட்ட அனுமதித்த துரோகம் என திமுக, காங்கிரஸ் ஆட்சி செய்தது பல.

ஜல்லிக்கட்டு போட்டி: 2ஜி ஊழல் வழக்கால் காங்கிரஸ் மிரட்டலுக்கு திமுக துணை போனது. ஜல்லிக்கட்டை காங்கிரஸ் தடை செய்தது. பிரதமர் மோடி மீண்டும் நடப்பதை உறுதி செய்தார்.

ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்களுக்கு மாதம் ரூ.1,000 கொடுப்போம் என்று திமுக கூறியது. ஒரு ரூபாய் கூடக் கொடுக்கவில்லை. வாக்களிக்க திமுக பணம் கொடுக்கவந்தால், கஞ்சா விற்ற பணம் வேண்டாம் என்று மக்கள் கூற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE