அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர் வீட்டில் ரூ.1 கோடி பறிமுதல்

By செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி அருகே அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதியின் உறவினர் அன்பரசு வீட்டில் ரூ.1 கோடி நேற்று பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி மக்களவைத் தொகுதியில் தேர்தல் முறைகேடுகளை தடுக்க 81 தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் திருச்சியில் உள்ள கட்டுமான நிறுவனம் மற்றும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி, ரூ.3 கோடிக்கு மேல் பணத்தை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், தேர்தல் பறக்கும் படையினருக்கு கிடைத்த தகவலின்பேரில், ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட எட்டரை கீழத் தெருவில் உள்ள அன்பரசு வீட்டில் அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, வீட்டின் ஒரு அறையில் இருந்த 2 சாக்கு மூட்டைகளை சோதனை செய்தபோது, அதில், ரூ.1 கோடிக்கும் மேல் பணம் கட்டுகட்டாக இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் வருமான வரித் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்குவந்த அதிகாரிகள், அன்பரசு மற்றும் அவரது மனைவியும், ஊராட்சி தலைவியுமான திவ்யாவிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE