“அண்ணாமலை கனவு காணட்டும்” - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா @ கோவை

By செய்திப்பிரிவு

கோவை: ஒட்டுமொத்த தமிழகமும் முதல்வர் ஸ்டாலின் பக்கம் உள்ளதாக, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.

கோவை கரும்புக் கடை பகுதியில் ரமலான் தொழுகை முடிந்து வந்த இஸ்லாமிய மக்களிடம், இண்டியா கூட்டணியின் கோவை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கணபதிப.ராஜ்குமாரை ஆதரித்து அமைச்சர்டி.ஆர்.பி.ராஜா நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசும் போது, ‘‘இந்தியாவின் தலையெழுத்தை மாற்றி எழுதக் கூடிய ஒரு காலக்கட்டம். பாசிச வாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளிடமிருந்து இந்தியாவை மீட்க, மாநில உரிமைகளை மீட்க வேண்டிய முக்கியமான காலக் கட்டத்தில் இருக்கிறோம்.

இஸ்லாமியர்கள் அடக்கு முறைகள், பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களின் வலிக்கு ஆறுதலாக இருக்கும் ஒரே தலைவர் முதல்வர் ஸ்டாலின் மட்டுமே. அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாவலராக திகழும் முதல்வர் ஸ்டாலினின் பக்கம் ஒட்டுமொத்த கோவையும், தமிழகமும் இருக்கிறது’’ என்றார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘அண்ணாமலை 60 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்கிறார். கனவு காணட்டும். பாஜகவில் நம் சமுதாயத்துக்கு எதிரானவர்களே உள்ளனர். அந்த காலத்தில் வாஜ்பாய்போன்ற அற்புதமான தலைவர்கள் இருந்தார்கள். இந்த முறை அதிமுகவைச் சேர்ந்த தாய்மார்கள், பாஜகவில் இருக்கும் சகோதரிகளும் நிச்சயமாக உதயசூரியனுக்கு வாக்களிப்பார்கள்’’ என்றார்.

இந்நிகழ்வின் போது, மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்,தேர்தல் பொறுப்பாளர் மணிசுந்தர், பகுதி கழக செயலாளர் ஷேக் அப்துல்லா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE