பொதுமக்களுடன் ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி: தேர்தலை புறக்கணிக்கும் முடிவில் பரந்தூர் மக்கள் உறுதி

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: சென்னையின் 2-வது விமான நிலையம் பரந்தூர் பகுதியில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக 5,200 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதில் விவசாய நிலங்கள், நீர் நிலைகள் மற்றும் பொதுமக்களின் குடியிருப்புகள் என பல இடங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. ஏகனாபுரம் உள்ளிட்ட சில கிராமங்கள் முழுமையாக இந்த விமான நிலையத் திட்டத்துக்காக கையகப்படுத்தப் படுகின்றன.

இதனைத் தொடர்ந்து ஏகனாபுரம் கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவர்கள் போராட்டம் 625 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இவர்கள் போராட்டம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்குகளை அளித்து அவர்களை வாக்களிக்கச் செய்ய அதிகாரிகள் சென்றனர். ஆனால் அந்த கிராமத்தில் இருந்து யாரும் வாக்களிக்க முன் வராததால் அதிகாரிகள் திரும்பினர்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம், தேர்தல் ஆணையம் சார்பில் அதிகாரி ஒருவர் உட்படபலர் ஏகனாபுரம் சென்றனர். தேர்தலை புறக்கணிப்பதால் என்னநடக்கப் போகிறது இந்த புறக்கணிப்பு போராட்டத்தை கைவிடுங்கள் என்று பொதுமக்களிடம் வலியுறுத்தினர். பொதுமக்கள் இதனைஏற்கவில்லை.

தேர்தலை புறக்கணிப்பதாக கூறுவதால்தான் நீங்கள் கூட இப்போது தேடி வந்திருக்கிறீர்கள். விமான நிலையத் திட்டத்தை கைவிடுவது தொடர்பான உறுதியை கொடுக்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்பது உறுதி என்று தெரிவித்துவிட்டனர். இதனால் அதிகாரிகள் ஏகனாபுரத்தில் இருந்து திரும்பிச் சென்றனர்.

இது குறித்து பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.எல்.இளங்கோவிடம் கேட்டபோது, “தேர்தல் புறக்கணிப்பை கைவிடக்கோரி ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் கோரிக்கை வைத்தனர்.

ஓர் உத்தரவில் ஆட்சியர் இந்த பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை நிறுத்த முடியும். அதற்கான நடவடிக்கையை அவர் எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அதற்கான எந்த உறுதியும் கொடுக்கவில்லை. இதனால் தேர்தலை புறக்கணிப்பதாக பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE