விசிகவுக்காக பிரச்சாரத்துக்கு வந்த திமுக எம்எல்ஏவை தடுத்து நிறுத்திய பாமகவினர்!

By செய்திப்பிரிவு

விழுப்புரம்: திருவெண்ணெய் நல்லூர் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குவாக்கு கேட்டு கிராமத்துக்குள் வரக்கூடாது என திமுக எம்எல்ஏ-வின் பிரச்சார வாகனத்தை தடுத்து நிறுத்தி பாமகவினர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக் குமாரை ஆதரித்து உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ மணிக்கண்ணன் நேற்று முன்தினம் திருவெண்ணெய் நல்லூர் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கும் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு பெரிய செவலை கிராமத்துக்கு வாக்கு சேகரிக்க சென்ற போது பிரச்சார வாகனத்தை கிராமத்துக்கு வெளியே தடுத்து நிறுத்திய பாமகவினர் தங்கள் கிராமத்துக்குள் நுழைய கூடாது எனக் கூறி எம்எல்ஏ மணிக் கண்ணனிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பெரிய செவலை கிராமத்தைச் சேர்ந்த பாமக முன்னாள் ஒன்றிய செயலாளர் வடிவேல், பிரேம் உள்ளிட்டோர் விசிக கொடியோடு உள்ளே வரக் கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பிரச்சாரத்துக்கு வந்த இளங்கோவன் என்பவரது காரை ஓட்டி வந்த பிரகாஷ் என்பவர் பாமகவினரை சமாதானப் படுத்தினார். அவரை பாமக-வினர் விரட்டி அடித்தனர். பின்னர் திருவெண்ணெய் நல்லூர் போலீஸார் கூட்டத்தை கலைத்து பிரச்சார வாகனத்தை கிராமத்துக்குள் அழைத்துச் சென்று முழு பாதுகாப்பு அளித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE