மதுரை: “நவீன அரசியல் திட்டிக்கொள்ளும் அரசியலாக இருக்கக் கூடாது; திருத்திக்கொள்ளும் அரசியலாக இருக்க வேண்டும்” என மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த மநீம தலைவர் கமல்ஹாசன் பேசினார்.
மதுரை ஆனையூரில் வியாழக்கிழமை மநீம தலைவர் கமல்ஹாசன், மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியது: “நான் ஏன் அரசியலுக்கு வரவேண்டும் என கேட்கின்றனர். இங்கு நல்லது செய்ய வேண்டுமென்றால் கூட அனுமதி பெற வேண்டியுள்ளது. அரசியல் ஒரு பலம். அரசியலுக்கு வந்தால்தான் நல்லது செய்ய முடியும் என்று புரிந்து கொண்டு அரசியலுக்கு வந்தேன். வேட்பாளர் சு.வெங்கடேசனும் வந்த காரணமும் அதுதான். நான் வித்தியமாசமான அரசியல் செய்ய வந்திருக்கிறேன். செய்யப்போவதைப் பற்றித்தான் பேச வேண்டும். செய்யத் தவறியவர்களை பற்றி பேசுவது நேர விரயம்.
நவீன அரசியல் திட்டிக்கொள்ளும் அரசியலாக இருக்கக் கூடாது, திருத்திக்கொள்ளும் அரசியலாக இருக்க வேண்டும். கரோனா காலத்தில் ரூ.5 கோடி நிதி கிடைக்காமலும் பல நற்பணிகளை செய்திருக்கிறார். அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டியது மக்களின் கடமை. காவல்கோட்டம் போன்ற நாவல் எழுதியிருக்கிறார் என்பதை விட விவசாயிகளின் ஊருக்கு ரயில்பாதை அமைத்துக் கொடுத்துள்ளார். இவரைப் போல் இந்தியாவில் மக்களுக்கு நல்லது செய்த எம்பிக்கள் யாரும் இருப்பதாக தெரியவில்லை. அவருக்கு எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்.
500 கோடிக்கு மேல் கல்விக் கடன் செய்து கொடுத்திருக்கிறார். இவருக்கு கீழடி நாயகன் என்ற பட்டம் இருக்கிறது. சிறந்த நாடாளுமன்ற வாதி. பிரதமர் மருத்துவ நிதியை முழுமையாக சென்றடையச் செய்தவில் இவருக்கு நாட்டில் முதலிடம். மதுரையின் வீரத்தையும், பாசத்தையும் பிரிக்க முடியாது. இனி வருங்காலங்களில் மதுரையையும் திமுகவையும் பிரிக்க முடியாதது என்று சொல்லும் அளவுக்கு பல திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது. இதனை மாநகரமாக மாற்றிய பெருமை கருணாநிதியைச் சேரும்.மாநகராட்சியாக தரம் உயர்த்தினார்.
» “திமுகவை பழிவாங்கிட பாமகவை அதிமுகவினர் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” - அன்புமணி @ சேலம்
» செய்தித் தெறிப்புகள் @ ஏப்.11: ராமதாஸ் எச்சரிக்கை முதல் விஜய் கட்டிய கோயில் வரை!
உயர் நீதிமன்றக் கிளையை தோற்றுவித்தார். நவீன நகரமாக மாற்றியவர் கருணாநிதி. அவரது வழியில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் செய்ததை பட்டியலிடலாம். கீழடி அருங்காட்சியகம், கலைஞர் நூற்றாண்டு நூலகம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கம் இப்படி 70 திட்டங்கள் செய்துள்ளனர்.கீழடியின் கலாச்சாரம் மனிதர்களின் கலாச்சாரம். உலகத்தின் கலாச்சாரத்தில் ஒருபகுதி. அதைப்போற்றி பாதுகாக்க வேண்டியது நமது கடமை.
தமிழகத்தை விளையாட்டு தலைநகரமாக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி பாடுபடுகிறார். அது நிச்சயம் நிறைவேறும் நல்லவர்கள் கையில் ஆட்சி கிடைத்தால் மக்களுக்கு நல்லது நடக்கும். இதேபோல் கூட்டத்தை 100 ஆண்டுக்கு முன்பு காந்தியார் மட்டுமே கூட்டியிருக்க முடியும். காந்தியார் சட்டையைத் துறந்தது மதுரையில்தான். இங்கே நான் செய்து கொண்டிருக்கும் நல்லவைகள் நாடெங்கும் பரவ வேண்டும். செய்யவில்ல என சுட்டிக்காட்டுவதைவிட செய்திருக்கிறோம் என சுட்டிக்காட்ட வேண்டும்.
தமிழகத்தில் நடக்கும் நல்ல அரசியலால்தான் நாட்டிலேயே அதிகபட்சமாக 43 சதவீத பெண்கள் தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றனர். அதற்கு இங்கு நடந்த நல்ல அரசியல்தான் சாத்தியப்பட்டது. கீழடிக்கு அருங்காட்சியகம் கேட்டோம்... செய்யவில்லை. குஜராத்தில், ஆந்திராவில், பிஹாரில் எய்ம்ஸ் உருவாக்க முடிந்த உங்களுக்கு ஏன் தமிழகத்தில் உருவாக்க முடியவில்லை? தமிழகத்துக்கு மட்டும் ஏன் இந்த பணிகளில் எல்லாம் ஓரவஞ்சனை.
அண்ணா சொன்னதுபோல் தெற்கு தேய்ந்து கொண்டிருக்கிறது. அதைத் தடுக்க இந்த தேர்தலில் கேடயமாக சு.வெங்கடேசன் இருக்கிறார். நல்லதை தொடரவேண்டும் என்றால் இவருக்கு வாய்ப்பு கொடுத்தே ஆகவேண்டும். எனக்கு என்ன லாபம் என்பதை விட மதுரைக்கு என்ன லாபம், மக்களுக்கு என்ன லாபம் என நினைத்தால் நாளை நமதாகும்” என்று அவர் பேசினார்.