கடலூர் திமுக எம்.பி மீதான கொலை வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி @ ஐகோர்ட்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: கடலூர் திமுக எம்.பி டி.ஆர்.வி.எஸ்.ரமேஷுக்கு எதிரான கொலை வழக்கின் விசாரணையை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த பண்ருட்டியை அடுத்த மேல்மாம்பட்டையைச் சேர்ந்த தொழிலாளி கோவிந்தராசு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் எம்.பி ரமேஷ் உள்ளிட்ட 6 பேரை சிபிசிஐடி, போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், வழக்கின் விசாரணை முறையாக நடைபெறவில்லை. சாட்சிகள் மிரட்டப்படுவதாக
கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், விசாரணையை செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றி கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது. மேலும், வழக்கை ஆறு மாதத்தில் விசாரித்து முடிக்கவும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், வழக்கு விசாரணையை அரசு வழக்கறிஞர் முறையாக நடத்தவில்லை எனக் கூறி, விசாரணையை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணைக்காக எனக்கு மட்டுமே சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வேறு யாருக்கும் சம்மன் அனுப்பப்படவில்லை. இது அரசுத் தரப்பு மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றால் எனக்கு நியாயம் கிடைக்காது” என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், அரசு வழக்கறிஞரை மாற்றுவது தொடர்பாக சிபிசிஐடியிடம் முறையிடலாம் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் மனுதாரருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE