“தமிழகம் எதிலும் முதலிடம்” - மத்திய அரசின் ஆவணங்களை சுட்டிக்காட்டி திமுக பட்டியல்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் எதிலும் முதலிடம் என்பதற்கு மத்திய அரசின் ஆவணங்களே சாட்சி. 50 சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்கி இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. முதல்வர் ஸ்டாலினின் திராவிட மாடல் தத்துவமே இந்தியாவின் எழுச்சிக்கு வழிகாட்டியாக உள்ளது என்று திமுக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகப்பேற்றுக்குபின் கவனிப்பு, கணினி பொருள்கள் ஏற்றுமதி, இந்தியாவில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஆகிய ஏழு பிரிவுகளின் ஆய்வுகள் குறித்த அறிக்கைகள் மத்திய அரசு நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளன. அவை அனைத்திலும் தமிழ்நாடு மாநிலமே சிறந்து விளங்குவதாக அந்த அறிக்கைகளும் வரைபடங்களும் தெளிவுபடுத்துகின்றன.

ஏற்றுமதி ஆயத்த நிலைக்கான 2022ம் ஆண்டின் குறியீடுகள்: உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான ஆயத்த நிலைகள் குறித்து மத்திய அரசின் நிதி ஆயோக் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது. மாநில அரசுகள், மத்திய நிர்வாகப் பகுதிகள் அனைத்தையும் குறித்த ஆய்வுகளில் நிதி ஆயோக் நிறுவனம் மாநில வாரியாக நிலைமைகளை ஆய்வு செய்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கைகள், வரைபடங்கள் மூலம் 80 முதல் 100 மதிப்பெண்கள் வரை பெற்று தமிழகமே முதலிடம் பெற்றுள்ளது என்ற செய்தி வெளியாகி உள்ளது.

பொறியியல் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி மதிப்பு குறித்த 2022 - 2023ம் ஆண்டின் அறிக்கையை மத்திய அரசின் தேசிய நிர்யாத் வெளியிட்டுள்ளது.

இறக்குமதி - ஏற்றுமதி பதிவுகள் குறித்து 2022 - 2023 ஆம் ஆண்டுக்கான விவரங்களை National Import – Export Record for Yearly Analysis of Trade (NIRYAT) என்று மத்திய அரசு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய நாடு முழுவதும் செய்துள்ள ஏற்றுமதியில் தமிழகம் மட்டும் 16.30 சதவீத பொருட்களை ஏற்றுமதி செய்து மராட்டிய மாநிலத்துக்கு அடுத்து இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளது.

கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரம்: கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரம் தேசிய ஏழ்மைக் குறியீடுகள் குறித்த 2023ம் ஆண்டுக்கான அறிக்கையில் கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரக் குறியீடுகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

கர்ப்பிணிப் பெண்கள் பராமரிப்புடன் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் தமிழகம் 3.31 புள்ளிகளைப் பெற்று இந்தியாவில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகம் 3.31 புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில் குஜராத் 12.72 புள்ளிகளையும், பிகார் 29.75 புள்ளிகளையும், உத்தரப்பிரதேசம் 30.03 புள்ளிகளையும் பெற்று தமிழகமே முதலிடம் என்பதைப் பறைசாற்றுகிறது.

மருத்துவமனைகளில் மகப்பேறுகள்: ஆண்டு வாரி சுகாதார ஆய்வு மக்கள் தொகை ஆணையர் மற்றும் தலைமைப் பதிவாளர் அலுவலகத்தின் முக்கியப் புள்ளியியல் பிரிவு ஆய்வுகளின் படி நாட்டில் நடைபெறும் பிரசவங்களில் மருத்துவமனைகளில் பாதுகாப்புடன் நடைபெறக்கூடியது தமிழகத்தில் தான் அதிகம்.

அதாவது 99 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் கேரளாவிற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தான் நடைபெறுகின்றன என்று தமிழகம் வெகுவாகப் பாராட்டப்பட்டுள்ளது.

மகப்பேறுக்கும் பிந்திய கவனிப்பு: குழந்தை பிறந்த பின் சிசு கவனிப்பில் அனைத்து வசதிகளுடனும் குழந்தைகளைப் பராமரித்துக் காப்பதிலும் தமிழகம்தான் முன்னனியில் உள்ளது.

மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கான சமூக முன்னேற்றக் குறியீடுகள் பற்றிய ஆய்வில் பெரிய மாநிலங்களில் தமிழகம் 89.9 சதவீதங்களைப் பெற்று முன்னணி மாநிலமாகத் திகழ்வதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்: இந்தியாவில் தொழில் வளர்ச்சி முதலான பிரிவுகளில் மாநிலங்களை முன்னேற்றுவதில் பெரிதும் துணைபுரிவது சிறப்புப் பொருளாதார மண்டலங்கள். இதில் தமிழகம்தான் அதிக அளவில் 50 சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பெருக்கி இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது.

வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் 2022-2023ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை இதைப் புலப்படுத்தியுள்ளது. மோடி ஆட்சி செய்த குஜராத் மாநிலத்தில் 21 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மட்டுமே உள்ளன.

இப்படி, தமிழகம் எதிலும் முதலிடமும், அதனைத் தொடர்ந்து பல்வேறு சிறப்புக்களையும் உள்ளடக்கி வளர்ச்சியை எய்தியுள்ளதாக மத்திய அரசின் ஆவணங்களே இதற்கு சாட்சியாகும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் தத்துவமே இந்தியாவின் எழுச்சிக்கு வழிகாட்டியாக விளங்குகிறது." என்று அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE