தனியார் பள்ளிகள் முறைப்படுத்துதல் சட்டம்: சிறுபான்மையினர் பள்ளிக்கு விலக்கு கோரிய மனு மீது முடிவு எடுக்க உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: தனியார் பள்ளிகள் முறைப்படுத்துதல் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி சிறுபான்மையினர் பள்ளிகள் தரப்பில் அளிக்கப்பட்ட மனுக்கள் மீது ஜூன் 25-க்குள் முடிவு எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தனியார் பள்ளி களை முறைப்படுத்தும் வகையில் கடந்த 2018-ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டு, கடந்த ஆண்டு ஜனவரி முதல் விதிகள் வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டன.

சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் தொடங்க அரசிடம் முன்அனுமதி பெற வேண்டும். சிறுபான்மை அந்தஸ்து கோரி அரசிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்பன போன்ற விதிகள் அரசியல் சாசன உரிமைகளுக்கு எதிரானது எனக்கூறி சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் தரப்பில் 300-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஜெ. சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ் ஆஜராகி, ‘‘தமிழக அரசின் சட்டத்தில் சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு விலக்குஅளிப்பது குறித்து முடிவெடுக்க அரசுக்கு அதிகாரம் வழங்கப் பட்டுள்ளது. அதனடிப்படையில் சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு விலக்களிக்க கோரி விண்ணப் பிக்கப்பட்டுள்ளது’’ என வாதிட்டார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ‘‘விண்ணப்பங்கள் அரசின் பரிசீலனையில் இருந்து வருகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் இந்த விஷயத்தில் அரசு எந்த முடிவை எடுத்தாலும் அதை தற்போது அறிவிக்க இயலாது’’ என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக தமிழக அரசு வரும்ஜூன் 25-க்குள் முடிவு எடுக்க அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர். அதுவரை இந்த வழக்கில் ஏற்கெனவே விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்தும் உத்தரவிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE