புதுக்கோட்டை: மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியைத் தடுப்பதற்காக திமுகவும், அதிமுகவும் மறைமுக கூட்டணி வைத்துள்ளது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.
திருச்சி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து புதுக்கோட்டையில் நேற்று இரவு அவர் பேசியது: திமுகவின் உதவியோடு தமிழகம் முழுவதும் போதைப் பொருள் புழக்கம் அதிகமாக உள்ளது. நாட்டின் போதைப் பொருள் சந்தையாக தமிழகம் மாறி உள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. டிஎன்பிஎஸ்சி-க்கு தலைவரைக் கூட நியமிக்கவில்லை.
திமுக ஆட்சியின் மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். இதனால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்குகள் சென்றுவிடாமல் தடுக்கவும், அதிமுக ஆட்சியில் செய்த தவறுகளினால் சிறைக்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காக திமுகவும், அதிமுகவும் மறைமுக கூட்டணி வைத்துள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று 3-வது முறையாக மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைவது உறுதி. காவிரி - குண்டாறு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.