பிரதமர் வீட்டுவசதி திட்ட மானியத்தில் முறைகேடு தொடர்பாக விரிவான அறிக்கை: லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: பிரதமரின் வீட்டுவசதி திட்ட மானியத்தில் ரூ.54.40 லட்சம் முறைகேடு நடந்துள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கில் விசாரணை நடத்தி விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் வகையில் இந்திரா வீட்டு வசதித்திட்டம் மற்றும் பிரதமரின் வீட்டு வசதித்திட்டம் போன்றதிட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன.

இந்த திட்டத்தின்கீழ், அம்பத்தூர் அருகே சோழவரம் பகுதியில் பயனாளிகளுக்கு மானியம் வழங்கியதில் ரூ.54.40 லட்சத்துக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி சோழவரத்தைச் சேர்ந்த தாமோதரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில் ‘‘வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியம்முறையாக வீடு கட்டாதவர்களுக்கும், தகுதியில்லாதவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இதுதொடர்பாக விசாரணை நடத்தி முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதிஎஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்சஒழிப்புத்துறை சார்பில் மனுதாரர் அளித்த புகார் மீது விசாரணை நடத்தப்பட்டு, இதுவரை 25 சாட்சிகளிடம் விசாரணை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், இதுபோன்ற மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களில் நடைபெறும் முறைகேடுகளைக் கண்காணித்து தடுக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லையா, இதுபோல புகார் அளித்த பிறகுதான் நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்வி எழுப்பினர்.

மேலும், பிரதமரின் வீட்டு வசதித்திட்ட மானியத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனலஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை ஏப்.23-க்கு தள்ளிவைத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE