பழைய பயண அட்டையை காண்பித்து பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்க மாற்றுத் திறனாளிகளுக்கு அனுமதி

By செய்திப்பிரிவு

சென்னை: புதிய பயண அட்டையை இணையதளம் வாயிலாக பெறும் வரை பழைய அட்டையை காண்பித்து பேருந்துகளில் கட்டணமில்லாமல் மாற்றுத் திறனாளிகள் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் கிளை மேலாளர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மாற்றுத் திறனாளிகள், சுதந்திரபோராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்டோருக்கு அரசுப் பேருந்துகளில் பயணிப்பதற்கான கட்டணமில்லா பயண அட்டையை இணையதளம் வாயிலாக வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

முதல்கட்டமாக மாநகர பேருந்துகளில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு, இதற்கான வசதியை கடந்த ஆண்டு செப்.7-ம் தேதிசென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், 2024-25-ம் ஆண்டுக்கான பயண அட்டையை இணையதளம் வாயிலாக மாற்றுத் திறனாளிகள் பெறும் வரை, கடந்த மாதம் (மார்ச்) 31-ம்தேதி வரை செல்லத்தக்க பயணஅட்டை வைத்திருப்பவர்களை ஜூன் 30-ம் தேதி வரை பயணம்செய்ய அனுமதிக்க அறிவுறுத்தப்படுகிறது.

அதேபோல், இணையதளம் வாயிலாக பெறப்பட்ட பயண அட்டை வைத்திருப்பவர்களையும் பேருந்துகளில் பயணிக்க அனுமதிக்க வேண்டும். இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, அனைத்து நடத்துநர்களும் மாற்றுத்திறனாளிகளிடம் கனிவுடன் நடந்து கொள்வதோடு, எவ்வித புகாரும் வராத வண்ணம் பணிபுரிய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE