கோவை: அதிமுகவின் கோட்டையாக விளங்கும் மேற்கு மண்டலத்தில் கடந்த மக்களவைத் தேர்தலைப் போலவே, இந்தத் தேர்தலிலும் வெற்றி பெறும் முனைப்பில் திமுக தீவிரம் காட்டி வருகிறது. பாஜகவும் கொங்கு மண்டலத்தில் முத்திரை பதிக்க வேண்டும் என கங்கணம் கட்டி களத்தில் மோதுவதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்கள் வருகின்றன.கொங்கு மண்டலத்தைப் பொருத்தவரை சட்டப்பேரவைத் தேர்தல்களில் தொடர்ந்து அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து வெற்றி பெற செய்து வருகின்றனர். இதனால் தமிழகத்தின் மேற்கு பகுதியான கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக விளங்கி வருகிறது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக 75 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
மேற்கு மண்டலத்தில் மட்டும் 44 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 2014 மக்களவைத் தேர்தலில் அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் 2019 தேர்தல்களம் அதிமுகவுக்கு தலை கீழ் நிலையை ஏற்படுத்தியது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக எதிர்கொண்ட முதல் மக்களவைத் தேர்தலான 2019-ல் திமுக 38 தொகுதிகளில் வென்று தனது பலத்தைக் காட்டியது. 2024 மக்களவைத் தேர்தலில் மீண்டும் மேற்கு மண்டலத்தில் கூட்டணி பலத்துடன் வெல்லும் முனைப்பில் திமுக தீவிரம் காட்டி வருகிறது.
2014-ல் தனித்து போட்டியிட்டு மக்களவைத் தேர்தலில் வெற்றியைக் குவித்த அதிமுக 2024 தேர்தலில் மேற்கு மண்டலத்தில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற தேர்தல் களத்தில் பணியாற்றி வருகிறது. கட்சி கட்டமைப்பு வலுவாக உள்ள அதிமுக, திமுக மாறி, மாறி வெற்றி பெறும் சூழலில் மேற்கு மண்டலம் யார்வசம் என்பது தேர்தல் முடிவுகளில் தெரிய வரும்.
இது குறித்து, அரசியல் ஆய்வாளர்கள் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 1967-ல் திமுக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது முதல் மேற்கு மண்டலம் திராவிட கட்சிகளின் அரசியல் களமாக மாறிவிட்டது. தமிழகத்தைப் பொருத்தவரை கட்சிகள் அமைக்கும் கூட்டணி தான் வெற்றிக்கு முக்கிய திருப்புமுனையாக இருந்து வருகிறது. அதே நிலை தான் இப்போதும் தொடருகிறது. திமுகவின் தேர்தல் வியூகத்தில் அக்கட்சி அமைக்கும் கூட்டணி தான் அதன் வெற்றி பார்முலா.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு எதிராக அதிமுக, பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டன. 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாஜக தனி அணியாகப் பிரிந்து போட்டியிடுகின்றன. திமுகவோ காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளடக்கிய பலமான கூட்டணியை தக்க வைத்து தேர்தல் களத்தில் மோதுகிறது. மேற்கு மண்டலத்தில் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அடிக்கடி கோவைக்கு வந்து திட்ட நிகழ்வுகளில் பங்கேற்று வருகின்றனர்.
கோவைக்கு, டைடல் பூங்கா விரிவாக்கம் உள்ளிட்டவை மூலம் திமுக முக்கியத்துவத்தை அளித்து வருகிறது.திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் அனைத்தும் மேற்கு மண்டலத்தில் பெரும்பான்மை சமுதாயமான கொங்கு வேளாளர், அருந்ததியர் மற்றும் வன்னியர் சமுதாய வாக்குகளை பெற காய் நகர்த்தி வருகின்றன.
தமிழக அரசியலில் எப்போதும் பலம் பொருந்திய கூட்டணியை அமைக்கும் கட்சி தான் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்கி வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி அடங்கிய மேற்கு மண்டல பகுதிகளில் உள்ள தொகுதிகள், திமுகவின் கூட்டணி பலம் அக்கட்சிக்கு சாதகமாக உள்ளது என்றனர்.