புதுக்கோட்டை: வாக்குக்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லைஎன மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனக்கு ஆரத்தி எடுத்தவர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. எத்தனை பேருக்கு அவர் பணம் கொடுத்தாலும், ஒருவர் கூட அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை என சொல்வது பச்சைப் பொய். இதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். திமுக சார்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க மாட்டோம்.
எங்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. வாக்குக்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை ரூ.1,823 கோடி அபராதம் விதித்துள்ளது மிகப் பெரிய மோசடி. தேர்தல் ஆணையம், சிபிஐ, வருமான வரித் துறை, அமலாக்கத் துறை அனைத்தும் பாஜகவின் இன்னொரு கூட்டணி. ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு எல்லாம் மாறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.