“மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப்” - உதயநிதி

By என். முருகேவல்

மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சியமைத்தால் பள்ளி மாணவர்களுக்கு கண்டிப்பாக லேப்டாப் வழங்கப்படும் என திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று விருத்தாசலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார்.

கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத்தை ஆதரித்து நேற்று விருத்தாசலத்தில் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், கடந்த 2019 தேர்தலின் போது, இங்கு உங்களை சந்தித்து வாக்கு கோரினேன். அப்போது போட்டியிட்டவர்களை வெற்றிபெறச் செய்தீர்கள். அடுத்து 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது வாக்கு சேகரித்தோம். அப்போது சில வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது. அதனால் நீங்கள் வாக்களித்து திராவிட மாடல் அரசு அமைந்தது.

அப்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். அந்த வகையில் மகளிருக்கு இலவச பேருந்து பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. வாக்குறுதி அளிக்காமலேயே உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு உதவித் தொகையாக மாதம் ரூ.1000 வழங்கி வருகிறோம். அதுமட்டுமின்றி, தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 17 லட்சம் மாணவ, மாணவியருக்கு காலை உணவுத் திட்டம் வழங்கப்படுகிறது.

அப்போது கூட்டத்திலிருந்த மாணவர்கள் சிலர், பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க வேண்டும் என்றனர். அதற்கு கடும் நிதி நெருக்கடி காரணமாக அதை செயல்படுத்த முடியாமல் போனது. மத்தியில் இண்டியா கூட்டணி அமைந்தால் மாணவர்களுக்கு கண்டிப்பாக லேப்டாப் வழங்கப்படும். பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும்போது, லேப்டாப் கொடுக்காமல் விடுவோமா. நிச்சயமாக வழங்கப்படும்.

மத்தியில் உள்ள மோடி ஆட்சி தமிழகத்துக்கு நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறது. தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் வரி பகிர்வு மிகக் குறைவாகவும், பாஜக ஆளும் மாநிலங்களில் கூடுதலாகவும் வழங்கி வருகிறது. கேஸ் சிலிண்டர் விலையை ரூ.800 வரை உயர்த்திவிட்டு, தற்போது ரூ.100 குறைக்கிறார். மக்களை இனியும் ஏமாற்ற முடியாது. பாஜக ஆட்சியை விரைவில் வீட்டுக்கு அனுப்ப நீங்கள் உங்கள் வாக்கினை கை சின்னத்திற்கு அளிக்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE