‘பிரதமர் மோடி கூறிய 400 தொகுதிகளில் தென்காசியும் உண்டு’ - ஜான் பாண்டியன் பேச்சு

By அ.கோபால கிருஷ்ணன்

ஸ்ரீவில்லிபுத்தூர்: மக்களவை தேர்தலில் பாஜக 400 தொகுதியில் வெற்றி பெறும் என பிரதமர் மோடி கூறியதில் தென்காசி தொகுதியும் உண்டு என தென்காசி தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளர் ஜான் பாண்டியன் தெரிவித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் மண்டபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. பாஜக மாவட்ட தலைவர் சரவண துரைராஜா, அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் காளிமுத்து, ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் கதிரவன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழாவில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவரும் தென்காசி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான ஜான்பாண்டியன் கலந்து கொண்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் தென்காசி மக்களுக்கு தொண்டு செய்வதற்காக என்னை வேட்பாளராக நிறுத்தியுள்ளார்கள். அரசியல் களத்தில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்.

திமுக அளிக்கின்ற போலியான வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களிக்க கூடாது. சுற்றுலா மேம்பாடு, தொழில் வளர்ச்சி, செண்பகவல்லி அணை, புதிய ரயில் சேவைகள் உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் எதிரொலிப்பேன். தேசிய நீரோட்டத்தில் இருந்தால் தான் இந்த பிரச்சினைகளை தீர்க்க முடியும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE