புழல் சிறையில் விசாரணை கைதியை தாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு

By செய்திப்பிரிவு

சென்னை: புழல் சிறையில் விசாரணைக் கைதியை தாக்கிய சிறை காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த ரோஷன் சல்மா, உயர் நீதி்மன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப் பதாவது: விசாரணைக் கைதியாக கடந்த 4 ஆண்டுகளாக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எனது கணவர் முகமது ரிப்பாஸை, சிறை காவலர்கள் கண்ணன், சதீஷ், முரளி ஆகியோர் ஆபாச வார்த்தைகளால் திட்டி, கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். ஷூகால்களால் உடலின் பல இடங்களில் மிதித்துள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்துள்ள எனது கணவர் முகமது ரிப்பாஸுக்கு உரிய மருத்துவ சிகிச்சையும் அளிக்கவில்லை. எனவே, சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து அவருக்கு சிகிச்சை அளிக்க அறிவுறுத்த வேண்டும். அத்துடன் தற்போது தனிமைச் சிறையில் அடைக்கப் பட்டுள்ள எனது கணவரைத் தாக்கிய சிறை காவலர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.நதியா, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையீடு செய்தார். அதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக மார்ச் 25 ( நாளை ) விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE