அதிமுக வேட்பாளர் மாற்றம்: நெல்லையில் சிம்லா முத்துச்சோழனுக்கு பதிலாக ஜான்சி ராணி போட்டி

By செய்திப்பிரிவு

சென்னை: நெல்லை தொகுதி அதிமுக வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார். புதிய வேட்பாளராக ஜான்சி ராணியை அறிவித்துள்ளது அதிமுக தலைமை. முன்னதாக, திமுக முன்னாள் பெண் அமைச்சர் சற்குணபாண்டியனின் மருமகளும், ஆர்.கே.நகரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவருமான சிம்லா முத்துச்சோழன் நெல்லை மக்களவை தொகுதியில் போட்டியிடுவார் என்று அதிமுக அறிவித்தது.

திமுக துணை பொதுச் செயலாளரும் ,முன்னாள் அமைச்சருமான சற்குண பாண்டியனின் இரண்டாவது மருமகள் சிம்லா முத்துச்சோழன் (35). கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூரை பூர்விகமாகக் கொண்ட இவர், பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். வழக்கறிஞர் தொழில் செய்து வரும் சிம்லா, கிட்டத்தட்ட 20 வருடங்களாக திமுகவில் பணியாற்றி வந்தார்.

முதலில் வடசென்னை மகளிர் வழக்கறிஞர் அணியில் அமைப்பாளராக இருந்தார். பின்னர் மாநில மகளிர் அணி பிரச்சாரக் குழு செயலாளராக பொறுப்பு வகித்தார். அப்போது தான், 2016 சட்டசபை தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து திமுக சார்பில் களமிறக்கப்பட்டார் சிம்லா முத்துச்சோழன்.

அந்தத் தேர்தலில் தோல்வியை தழுவினாலும், தொடர்ந்து திமுகவில் பயணித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுகவில் அங்கீகாரம் இல்லை என்று குற்றம்சாட்டி அதிமுகவில் இணைந்தார். இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சிம்லா முத்துச்சோழனுக்கு நெல்லை தொகுதியில் சீட் வழங்குவதாக அறிவித்தது.

ஆனால், தற்போது சிம்லா முத்துச்சோழனுக்கு பதிலாக திசையன்விளை பேரூராட்சி மன்றத் தலைவராக இருக்கும் ஜான்சி ராணியை புதிய வேட்பாளராக அறிவித்துள்ளது அதிமுக தலைமை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE