ரோஹன் குப்தா, குஜராத் மாநிலம் அகமதாபாத் கிழக்கு மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அண்மையில் அறிவிக்கப்பட்டார். ஆனால் அவரது தந்தையின் உடல் நிலையை காரணம் காட்டி தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டார். எனினும் காங்கிரஸ் கட்சியின் புதிய வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகுவதாக ரோஹன் குப்தா அறிவித்துள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “காங்கிரஸ் வேட்பாளர்களில் இருந்து விலகும் முடிவை தொடர்ந்து மற்றொரு கடினமான முடிவை எடுத்துள்ளேன். கடந்த 15 ஆண்டுகால கட்சி பணிக்குப் பிறகு கட்சியை விட்டு விலக முடிவு செய்துள்ளேன்.
கட்சியின் தகவல் தொடர்பு துறை மூத்த தலைவரால் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டதாலும், எனது நற்பெயரை கெடுக்கும் முயற்சி காரணமாகவும் இந்த முடிவை எடுத்துள்ளேன்” என்று கூறியுள்ளார். இதுகுறித்து குஜராத் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணிஷ் தோஷி கூறும்போது, “ரோஹன் குப்தா தனது தொழில் நலன்களுக்காக பாஜகவில் சேர விரும்புகிறார்” என்றார்.