என்எல்சி நிறுவன பங்கு விற்பனையை கைவிட வேண்டும்: மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் பங்குகளில் 2002-ல் 49 சதவீதத்தையும், 2006-ல் 10 சதவீதத்தையும், 2013-ல் 5 சதவீதத்தையும் விற்பனை செய்ய மத்திய அரசு முயற்சித்தது.

ஆனால் இதை எதிர்த்து முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் விளைவாக இவை தடுக்கப்பட்டன. இருப்பினும் தொடர் போராட்டம் மற்றும் எதிர்ப்புகளை மீறியும் சிறுக, சிறுக 20 சதவீத பங்குகள் விற்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது 7 சதவீத பங்குகள், சலுகை விற்பனை என்ற அடிப்படையில் ரூ.226 விலையுள்ள பங்கைரூ.212-க்கு விற்பதற்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. உத்தேசிக்கப்பட்டுள்ள 9 கோடிக்கும் அதிகமான இப்பங்குகளை பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களால் தான் வாங்க முடியும்.

மேலும் ரூ.2 ஆயிரம்கோடி நிதி தேவைக்காக, ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லாபம் ஈட்டி தரும் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வது என்பது பொதுத்துறை நிறுவனத்தை தனியார் மயமாக்கும் முயற்சியாகும்.

எனவே இந்திய நாட்டின் மின் தேவையில் முக்கிய பங்காற்றும் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 7 சதவீத பங்குகள் விற்பனை அறிவிப்பு நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE