தகுதியில்லாத செவிலியர்களிடம் லஞ்சம் பெற்று பணி நியமனம்: அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி வழக்கு

By செய்திப்பிரிவு

சென்னை: தகுதியில்லாத செவிலியர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு முறைகேடாக பணி நியமனம் வழங்கிய சுகாதாரத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக நமக்கு நாமே செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் தலைவரான விழுப்புரம் எஸ். செந்தில்நாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘எங்களது சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறையில் பணியாற்றும் செவிலியர்களின் நலன் மற்றும் பணி நியமனத்துக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். தமிழகத்தில் கரோனா காலகட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்களை தமிழக அரசு பணி நீக்கம் செய்து கடந்த 2022-ம் ஆண்டு டிச.30-ம் தேதி அரசாணை பிறப்பித்தது.

அதை எதிர்த்து 977 செவிலியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கரோனா காலகட்டத்தில் உயிரைப் பணயம் வைத்து பணிபுரிந்த ஒப்பந்த செவிலியர்களின் கோரிக்கையை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.

அந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, கரோனா காலகட்டத்தில் நியமிக்கப்பட்ட 977 ஒப்பந்த செவிலியர்களை முன்னுரிமை அடிப்படையில் நியமிப்பது தொடர்பாக தமிழக அரசு பரிசீலிக்க வேண்டுமென உத்தரவிட்டது.

தமிழக அரசு உத்தரவாதம்: அந்த உத்தரவுப்படி முதற்கட்ட மாக 977 ஒப்பந்த செவிலியர்கள் பணிநியமனம் செய்யப்படுவர் என்றும், அதன்பிறகு காலியிடங்கள் உருவாகும்போது அந்த பணியிடங்களில் எஞ்சியவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என தமிழக அரசின் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

ஆனால் தற்போது உயர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ள அந்த உத்தரவாதத்தை மீறி தமிழக அரசின் மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் முறையான இனசுழற்சி மற்றும் சாதி ஒதுக்கீடு அடிப்படையில் தகுதியான செவிலியர்களுக்கு பணி நியமனம் வழங்காமல், தகுதியில்லாத 963 செவிலியர்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை லஞ்சமாக பெற்றுக்கொண்டு அவர்களுக்கு குறுக்கு வழியில் பணி நியமனம் வழங்கியுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறைரீதியாகவும், குற்றவியல் ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரியி ருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் பி.மனோகரன், ஆர்.நந்தகுமார் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். தமிழகஅரசின் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், செவிலியர்களின் பணி நியமனம் தொடர்பாக எந்த வகையிலும் பாதிக்கப்படாத மூன்றாவது நபரால்இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதி, இதுதொடர்பாக தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஏப்.15-க்கு தள்ளிவைத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE