பம்பரம் சின்னம் ஒதுக்குவது தொடர்பான நீதிமன்ற உத்தரவையடுத்து,நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்தார்.
மக்களவை தேர்தலில், திமுக கூட்டணியில் ஒரு தொகுதியை பெற்றுள்ள மதிமுக, தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறது. முன்னதாக, தங்களுக்கான பம்பரம் சின்னத்தை பெறுவதற்காக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது மதிமுக.
இந்த வழக்கில், மக்களவை தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரும் மதிமுக மனு மீது 2 வாரங்களில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.
இந்நிலையில், நேற்று தலைமைச்செயலகம் வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவை சந்தித்தார். அப்போது, உயர் நீதிமன்ற உத்தரவு நகலை அவரிடம் வைகோ வழங்கி, சின்னம் ஒதுக்குவது குறித்து முடிவெடுக்க கேட்டுக் கொண்டார்.