எண்ணூர் அருகே மூடப்பட்ட அனல்மின் நிலைய சுடு தண்ணீர் தொட்டியில் விழுந்தவர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

பொன்னேரி: எண்ணூர் அருகே செயல்படாத அனல்மின் நிலைய சுடு தண்ணீர் தொட்டியில் விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கிரண்ராஜ்(19). வெல்டிங் தொழில் செய்துவரும் இவர், நண்பர்களுடன் இயற்கை காட்சிகள் உள்ளிட்டவற்றை செல்போனில் வீடியோ காட்சிகள் மற்றும் புகைபடங்களாக எடுத்து, அவற்றை சமூக வலைதளங்களில் பதிவிடுவது வழக்கம்.

அந்த வகையில், நேற்று முன் தினம் சென்னை, எண்ணூர் அருகே எர்ணாவூர் குப்பம் பகுதியில் உள்ள கடல்பகுதியில் செல்போனில் வீடியோ காட்சிகளை கிரண்ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் எடுத்தனர்.

அப்போது, அப்பகுதி ஆபத்தான பகுதி என, பொதுமக்கள் சிலர் எச்சரித்ததால், கிரண்ராஜ் உள்ளிட்டோர், எர்ணாவூர் குப்பம் பகுதியில் உள்ள, கடந்த 2017-ம் ஆண்டு மூடப்பட்ட எண்ணூர் அனல்மின் நிலையத்தின் சுடு தண்ணீர் தொட்டி வழியாக திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக, மழை நீர் தேங்கியுள்ள சுடு தண்ணீர் தொட்டியில் கிரண்ராஜ் தவறி விழுந்தார்.

இதனையறிந்த கிரண்ராஜின் நண்பர்கள், சுடு தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த கிரண்ராஜை உயிரிழந்த நிலையில் மீட்டனர். இதுகுறித்து, எண்ணூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE