நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட சிறை  தண்டனை நிறுத்திவைப்பு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: சமூக வலைத்தளங்களில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சை கருத்தை பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவாக விமர்சிக்கப்பட்ட பதிவை நடிகர் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் செயலாளர் மிதார் மொய்தின் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவினர், இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை எம்.பி. எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

எனினும், மேல்முறையீடு செய்ய உள்ளதாக எஸ்.வி.சேகர் தரப்பில் கூறியதை அடுத்து, ஒரு மாத காலத்திற்கு தண்டனையை நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டிருந்தது. சிறப்பு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் எஸ் வி.சேகர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கில் மறு உத்தரவு வரும்வரை நடிகர் எஸ்.வி. சேகருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைத்து உத்தரவிட்டார். மேலும், மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE