மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு நேற்று ஒரே நாளில் 40-க்கும் மேற்பட்ட அமைப்புகள் நேரில் ஆதரவு தெரிவித்தன. நடிகர் மன்சூர் அலிகான் ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய மக்கள் கட்சி, தென்நாட்டு மூவேந்தர் கழகம், மக்கள் மசோதா கட்சி, கோகுல மக்கள் கட்சி, இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி, சமதா கட்சி, ஆதிதிராவிடன் புரட்சி கழகம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட அமைப்புகள் நேற்று அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவை சேர்ந்த கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், பா.பென்ஜமின் ஆகியோரை நேரில் சந்தித்து அதிமுகவுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தன.
தொடர்ந்து இந்திய ஜனநாயக புலிகள் கட்சி நிறுவனர் நடிகர் மன்சூர் அலிகான் அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவை சந்தித்து பேசினார். வாய்ப்பளித்தால் போட்டியிடவும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, கோயில் பூசாரிகள் நலச்சங்கத்தின் 19-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் சேலம் மாவட்ட கோயில் பூசாரிகள் நலச்சங்கத்தின் சிறப்பு மாநாடு சேலத்தில் நேற்று நடைபெற்றது.
அப்போது, பேசிய சங்கத்தின் மாநிலத் தலைவர் வாசு, கோயில்களில் பணியாற்றும் 2 லட்சம் பூசாரிகள் வரும் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தார்.