சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால் எம்எல்ஏவாக நீடிக்கிறார் பொன்முடி

By செய்திப்பிரிவு

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்ததால், அவர் திருக்கோவிலூர் எம்எல்ஏவாக தொடர்ந்து நீடிக்கிறார். தொகுதி காலியானதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தமிழக உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2016-ம் ஆண்டு விடுதலை செய்தது. இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை கடந்த 2017-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் இருவரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டு, தலா 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.50 லட்சம் அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் கடந்த டிசம்பரில் தீர்ப்பளித்தது.

ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, பொன்முடி தனது எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவிகளை இழந்தார். இதைத் தொடர்ந்து, அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருக்கோவிலூர் சட்டப்பேரவை தொகுதி காலியானதாக கடந்த 5-ம் தேதி சட்டப்பேரவை செயலகத்தால் அறிவிக்கை செய்யப்பட்டு, தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையே, உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பொன்முடி, விசாலாட்சி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில், இருவருக்கும் விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் கடந்த 11-ம் தேதி உத்தரவிட்டது. இந்த வழக்கில் பொன்முடியை குற்றவாளி என்று அறிவித்த சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நேற்று வெளியிட்ட அறிவிக்கையில், ‘உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவின்படி, திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழக அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம், திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏவாக பொன்முடி தொடர்ந்து நீடிக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE